வாஷிங்டன்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை பற்றி சிஐஏ அமைப்பின் முழு அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சவுதி அரேபியாவை சேர்ந்த செய்தியாளர் ஜமால் கசோகி பணியாற்றி வந்தார். இவர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு தனது திருமணம் சம்பந்தமான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2ம் தேதி அவர் சென்றார். பிறகு, அவர் மாயமானார். அவர் சவுதி தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்தது. இது தொடர்பான அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அமிலத்தில் கரைத்து பாதாள கழிவு நீர் பாதையில் வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கியில் இருந்து வெளியான செய்திகள் தெரிவித்தன. ஆனால், கசோகி மரணம் குறித்து சவுதி அரேபிய அரசு முரண்பட்ட விளக்கங்களை அளித்து வந்தது. பின்னர் தனது தூதரகத்துக்கள் கசோகி கொல்லப்பட்டதை சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. இது சிலரின் நடவடிக்கையால் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் என கூறியது.