×

பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்: பத்திரப்பதிவு அதிகாரி சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி சங்கர் அதிரடி

சென்னை: பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஊத்துமலை பத்திரப்பதிவு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பத்திரப்பதிவுத்துறையில் உதவி-சார்பதிவாளராக உள்ளவர் சுப்பையா பாண்டி. இவர், அயல் பணியாக ஊத்துமலை பத்திரப்பதிவுத்துறையில் உதவி சார்பதிவாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக இவர், தனது அலுவலகத்தில், பல பெண் ஊழியர்களிடம் இரவு நேரங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். சில நேரங்களில் நள்ளிரவிலும் போன் செய்து பேசியுள்ளார். அப்போது, பெண் ஊழியர்களுக்கு சுப்பையா பாண்டி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன், பல பெண் ஊழியர்கள் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது, குடிபோதையில் ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். இதனால் பல பெண்களின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகளும் உருவாகியுள்ளது. ஆனால் அவரை தட்டிக் கேட்க பெண் ஊழியர்களுக்கு தைரியம் வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த பெண் ஊழியர்கள், உதவி சார்பதிவாளர் சுப்பையா பாண்டி மீது, அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்தப் புகார் பத்திரப்பதிவுத்துறை ஐஜிக்கும் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த பத்திரப்பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டார். விசாரணையில் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, சுப்பையா பாண்டியை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு அவர் மீது ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து குட்டி ஜமீனாக செயல்பட்டு வந்துள்ளார். மேலும், அரசு நிலங்கள் மற்றும் ஆள் வாரிசுகள் இல்லாதவர்களின் நிலங்களை போலி பத்திரம்போடும் கும்பலுக்கு உடந்தையாக இருந்து முறைகேட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் பதிவு செய்த அலுலவகங்களில் அனுமதியில்லாத மனையை அதிகமாக பதிவு செய்ததால் இவர் பணியில் இருந்த காலங்களில் மறு தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்திரவிட வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல்: பத்திரப்பதிவு அதிகாரி சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி சங்கர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Deeds ,Registration ,IG Shankar ,Chennai ,Registration Department ,Uthumalai Deeds Officer ,Dinakaran ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்