கும்பகோணம் : தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் கிராமத்தை சேர்ந்த சடலிங்கம் மகன் குருமூர்த்தி(23). பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி(19). இருவரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கடைக்காரர் குருமூர்த்தியை வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் குருமூர்த்தி கூலிவேலைக்கு சென்று வந்தார். ஆனாலும் காதல் நீடித்தது. நேற்று இரவு 8 மணி அளவில் காதல்ஜோடி இருவரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் திடீரென இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதை பார்த்த மற்ற பொதுமக்கள், காதல்ஜோடிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் ரத்தகாயங்களுடன் தரையில் சாய்ந்தனர். அவர்களை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக இருவரையும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள காதலி ராஜலட்சுமியை மட்டும் தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகிறார்கள். காதலி ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்த சிலர் அவர் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.
காதலர் பூங்கா
தாராசுரம் கோயிலில் உள்ள பூங்காவில் பக்தர்கள் மட்டுமல்லாது, காதல் ஜோடிகள் அதிகளவில் உலா வருகின்றனர். பல நேரங்களில் காதல் ஜோடியை மிரட்டி பிளாக் மெயில் செய்வது, கொள்ளையடிப்பது உள்ளிட்ட செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி