×

ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் கர்ப்பமான இளம்பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை கழிவறையில் ‘குவா... குவா...’

சென்னை: ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் கர்ப்பமான இளம்பெண், தனியார் மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் சென்னை சூளைமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் திருமணம் ஆகாத இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்களுடன் வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவர், மருத்துவரிடம் பிரசவத்திற்கு வந்ததாக தெரிவித்தார். மருத்துவர் அந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்து குழந்தை இன்று அல்லது நாளை பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவமனையில் உடனே அனுமதிக்க வேண்டும் என்றார்.

அப்போது, திடீரென இளம்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதாக தெரிவித்தார். உள்ளே சென்ற அவர் அரை மணி நேரமாக வெளியே வரவில்லை. பின்னர், மிகவும் சோர்வுடன் வெளியே வந்த அவர், தன்னுடன் மருத்துவமனைக்கு வந்த ஆண் நண்பர்களை வீட்டிற்கு செல்லலாம் என்று கூறிவிட்டு, அவர்களுடன் வேகமாக மருத்துவமனையை விட்டு சென்று விட்டார்.சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து குழந்தையின் அழும் சத்தம் கேட்டது. மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்த போது, தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு செவிலியர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் கழிவறையில் கிடந்த குழந்தையை மீட்டு அவசர சிகிச்ைச அளித்து உயிரை காப்பாற்றினர். தொடர்ந்து, மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தையா என விசாரித்தனர். அப்போது பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் யாருக்கும் நேற்று மாலை குழந்தை பிறக்கவில்லை என்றும், பிறந்த குழந்தைகள் அனைத்தும் தாயுடன் பத்திரமாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. போலீசார் மருத்துவமனைக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் பெண்கள் கழிவறை செல்லும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரித்தனர். அப்போது, நேற்று முன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு செல்லும்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததும், வெளியே வரும்போது வயிறு சுருங்கி இருந்ததும் தெரிந்தது. உடனே போலீசார் மருத்துவமனைக்கு வந்த பெண் குறித்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர்.அதில், சூளைமேட்டை சேர்ந்த நதியா (24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மருத்துவமனையில் கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, அவரது நண்பர் வீடு என தெரியவந்தது. உடனே இளம்பெண் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி நதியாவிடம் போலீசார் விசாரித்தனர்.அவர், ‘‘எனக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை. நான் திருமணம் ஆகாத இளம்பெண்’’ என்று கூறி மறுத்துள்ளார். அவர்களுடன் வந்தவர்களும் அதையே திரும்ப திரும்ப தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இளம்பெண் நதியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிசிடிவி கேமரா பதிவுகளை காட்டி விசாரணை நடத்தினர்.
அப்போது, நதியா வேறு வழியின்றி கழிவறையில் இருந்த குழந்தை என்னுடையது தான் என்று கூறி அழுதார். மேலும், திருமணம் ஆகாத நிலையில் கருவுற்றும், காலம் கடந்ததால் கருவை கலைக்க முடியாமல் போனதாகவும், தான் திருமணம் ஆகாமல் கர்ப்பமானது குறித்து வெளியூரில் உள்ள தனது பெற்றோருக்கு  தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என நினைத்து மறைத்துவிட்டதும் தெரியவந்தது.சம்பவத்தன்று நதியா மருத்துவமனைக்கு வந்தபோது, வயிற்று வலி அதிகமானதும், கழிவறைக்கு சென்று வாயில் துணியை வைத்து கடித்துக் கொண்டு குழந்தையை பெற்றதாகவும், குழந்தையை அங்கேயே வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல வெளியே வந்ததும் விசாரணையில் அம்பலமானது. மேலும், இளம்பெண் நதியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சூளைமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital ,friends , Male Friends, Close Habits, Gift, Baby
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...