சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, டிஜிபி ராஜேந்திரனிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று மனு அளித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். தமிழக அமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு அளிப்பதற்காக டிஜிபி அலுவலகத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று வந்தனர்.
முன்னாள் எம்பிக்கள் ஜே.எம்.ஆரூண், விஸ்வநாதன், ராணி, தாமோதரன், தணிகாசலம், கீழானூர் ராஜேந்திரன், சிரஞ்சீவி, பென்னட் அந்தோணி ராஜ், வக்கீல் செல்வம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரூபி மனோகரன், வீரபாண்டியன் ஆகியோர் டிஜிபி ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சராக இருந்தவர். தற்போதைய சூழலில் அரசியலில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருபவர். எனவே அவருக்கு அரசியலில் எதிரிகள் இருக்கலாம். மேலும் தமிழிசை போன்றவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநாவுக்கரசருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி