முசாபர்நகர்: மத்திய அரசின் ரபேல் ஒப்பந்தம் குறித்து பாஜ அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் விமானங்கள் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜ இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், ரபேல் ஒப்பந்தம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் தாவ்லி கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் பஞ்சாயத்து கூட்டத்தில் பாஜ அதிருப்தி தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா பேசியதாவது :
மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை ரபேல் ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே கூறியுள்ளார்.
போர் விமானங்கள் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய நிறுவனத்தை ரபேல் ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?
வரும் 2019 பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பாஜவை எதிர்க்க வேண்டும். இவ்வாறு சத்ருகன் சின்ஹா பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி