சென்னை: பாடலாசிரியர் வைரமுத்து மீது மேலும் 2 பாடகிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். பாடகி சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சின்மயி கூறினார். இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் பெண் இசைக் கலைஞர் சிந்துஜா ராஜாராம் ஆங்கில மீடியாவில் கூறியிருப்பதாவது: 15 வருடங்களுக்கு முன் இசையில் சாதிக்கும் லட்சியத்தில் இருந்தேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னையில் வைரமுத்து நடத்தி வரும் பெண்கள் ஹாஸ்டலில் தங்கினால் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என சொல்லி எனது அம்மா அங்கு என்னை சேர்க்க முயற்சி செய்தார். அப்போது வைரமுத்துவிடம் எனது அம்மா பேசினார். என்னை நேரில் சந்திக்க வைரமுத்து விரும்பினார். அவரை சந்தித்தபோது 20 நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, ‘உங்கள் பேச்சில் நீண்ட நாள் நட்பு தெரிந்தது’ என அவர் சொன்னார். பிறகு நான் கம்போஸ் செய்த பாடலை கேட்டு, ‘உங்களை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துகிறேன்’ என்றார். திடீரென ஒரு நாள் அவரிடம் அழைத்து சென்றார். பிறகு மீண்டும் எனக்கு போன் செய்து, ‘ரஹ்மான் உங்கள் இசையை கேட்டு சந்தோஷப்பட்டார். நீங்கள் தயவு செய்து என்னை அலுவலகத்தில் பாருங்கள். உங்களை பற்றி கவிதை எழுதியிருக்கிறேன். உங்களை நான் மிஸ் செய்கிறேன்’ என்றார். அந்த பேச்சுதான் எனக்கு எச்சரிக்கையாக அமைந்தது. அவரை சந்திக்கக் கூடாது என முடிவு செய்தேன். ஆனால் தொடர்ந்து எனக்கு போனில் அழைப்பு விடுத்தபடி இருந்தார். திடீரென ஒருநாள் போன் செய்து ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்றார். ‘சார் நீங்க என் அப்பா மாதிரி.
இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்கு பிடிக்கல’ என்றேன். மீண்டும் போன் செய்தபோது எனது ஆண் உறவினரை பேச வைத்து நான் ரெக்கார்டிங்கில் இருப்பதாக சொல்ல சொல்லிவிட்டேன். அடுத்த முறை போனில் பேசியவர், தான் சொன்ன விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் இன்னொருவரிடம் எனது போனை தர வேண்டாம் என்றார். மீண்டும் தன்னை பார்க்க வரும்படியும் அழைப்புவிடுத்தார். நான் ஏதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டேன். அதன் பின்பும் தொடர்ந்து அவர் எனக்கு போன் செய்தபடி இருந்தார். நான் அவரது போன் கால் எடுப்பதை தவிர்த்துவிட்டேன். இவ்வாறு சிந்துஜா ராஜாராம் கூறியுள்ளார்.
மற்றொரு பாடகியான அனன்யா என்பவர் கூறியிருப்பதாவது:
1998ல் பாடகியாகும் கனவுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தேன். அப்போது எனக்கு 25 வயது. விளம்பர படத்தில் பாடினேன். அப்போதுதான் வைரமுத்துவை சந்திக்க நேரிட்டது. எனது ெபயரை கேட்டு பாராட்டியவர், தனது அலுவலகத்துக்கு பாடல் செஷனுக்கு அழைத்தார். அப்போது பலர் முன்னிலையில் அங்கு நான் பாடினேன். அதன் பிறகு வாய்ப்பு எதுவும் வரவில்லை. ஆனால் தினமும் அவர் எனக்கு போன் செய்வார். ‘ஏ.ஆர்.ரஹ்மானிடம் உனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன்’ என்றார். நான் அவரிடம் வாய்ப்பே கேட்கவில்லை. அவராக இதையெல்லாம் சொன்னார். ஒருமுறை போன் செய்தபோது, ‘மலேசியாவில் தமிழ் சங்கம் விருது விழாவுக்கு செல்கிறேன். நீயும் உடன் வர வேண்டும்’ என்றார். ‘பாடுவதற்காகவா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவா?’ என கேட்டேன். ‘இரண்டும் கிடையாது.
உனக்கு புரியவில்லையா? நமது துறையில் இதெல்லாம் சகஜம். பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார். மீண்டும் ஒரு வாரம் கழித்து போன் செய்து, ‘மலேசியா செல்ல உனக்கும் டிக்கெட் எடுக்கட்டுமா, வேண்டாமா’என கேட்டார். ‘நான் வரவில்லை’ என்றேன். ‘உனக்கான அனைத்து கதவுகளையும் நான் மூடிவிடுவேன்’ என்றார். ‘உங்களால் அதுதான் செய்ய முடியும். நான் படிக்கிறேன். படித்து முடித்து வேறு வேலை பார்த்துக்கொள்வேன்’ என்றேன். அப்போதே பாடகியாகும் எனது கனவு சிதைந்து போனது. இவ்வாறு அனன்யா கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி