திருமலை: திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி தங்க திருச்சி வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரமோற்சவம் நடந்த நிலையில், தொடர்ந்து இந்தாண்டின் இரண்டாவது பிரமோற்சவமாக நவராத்திரி பிரமோற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியா சிறப்பு பூஜைகள் செய்து பிரமோற்சவத்திற்கான கங்கண கயிறு கட்டினார்.
பின்னர் தேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்து செல்ல நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துக்கு இடையே வீதி உலா வந்தார். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி நான்குமாட வீதியில் பவனி வந்தார். அப்போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவில் பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடியும், பல்வேறு வேடங்கள் அணிந்தும் பங்கேற்றனர். இன்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி