சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டின் முதல் நாள் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதனை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் அன்றைய கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களான ஜீனத் ஷெர்புதீன் (சேப்பாக்கம்), ஆர்.ராஜேந்திரன் (வீரபாண்டி), தி.ப.மாயவன் (திருவரங்கம்), கரு.முருகானந்தம் (சிவகங்கை), வெ.கோவிந்தன் (பேரணாம்பட்டு), லோகாம்பாள் (லால்குடி), என்.நன்மாறன் (மதுரை கிழக்கு), எஸ்.ஜி.விநாயகமூர்த்தி (பூங்காநகர்), வே.கண்ணன் (செஞ்சி), பெரி.சண்முகம் (திருவாடனை), எஸ்.அண்ணாமலை (ஆலந்தூர்), டாக்டர் எம்.மோசஸ் (நாகர்கோவில்) ஆகியோர் மறைவிற்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குரூப் கேப்டன் வருண்சிங் மற்றும் 11 ராணுவ உயர் அலுவலர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.துரைமாணிக்கம், பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார், மனித உரிமை செயல்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர் மறைவிற்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்….
The post முன்னாள் கவர்னர் ரோசய்யா முப்படை தளபதி ராவத்துக்கு பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.