ராப் பாடல் மூலம் சாதிக்க துடிக்கும் அர்ஜூன் பிரபாகரன், தனியார் பள்ளி ஆசிரியை ஆராத்யாவை காதலிக்கிறார். அப்போது அர்ஜூன் பிரபாகரனின் லட்சியம் ஈடேவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில், ஆராத்யா பணியாற்றும் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் நடக்கும் மோசடியில் தனது படிப்பு பாதிக்கப்பட்டதால், ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்கிறார்.
பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற தனது எண்ணத்தை அர்ஜூன் பிரபாகரனிடம் ஆராத்யா சொல்ல, பிறகு என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ். ராப் பாடகராக வரும் அர்ஜூன் பிரபாகரன், நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். ஆனால், ராப் பாடகருக்கான பாடிலாங்குவேஜ் மிஸ்சிங். அழகாக இருக்கும் ஆராத்யா, அளவான நடிப்பை வெளிப்படுத்தி மனதை கவர்கிறார்.
பள்ளி சேர்மனாக வந்து வில்லத்தனம் செய்யும் சுப்பிரமணியம் சிவா, போலீஸ் அதிகாரி சரவண சுப்பையா, அரசியல்வாதி முனீஷ்காந்த் மற்றும் சுருளி, காயத்ரி, திஹான், திவ்யஸ்ரீ ஆகியோர் நன்கு நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ஆர்.யுவராஜ், கதையின் இயல்புத்தன்மை பாதிக்காமல் படமாக்கியுள்ளார்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஜீவா கூடுதலாக உழைத்திருக்க வேண்டும். கல்வி வியாபாரத்தையும், ஆசிரியர்களின் பற்றாக்குறையினால் மாணவர்களின் படிப்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதையும் எதிர்த்து குரல் கொடுத்துள்ள இயக்குனர் நாராயணன் பழனி, இதை மியூசிக்கல் லவ் டிராமாவாக சொல்வதா? விழிப்புணர்வு பிரசார படமாக உருவாக்குவதா என்பதில் தடுமாறியிருக்கிறார்.

