×

கஞ்சா விற்பதை போலீசுக்கு தெரிவித்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: சோழவரம் அருகே பயங்கரம்; போலீசில் 2 பேர் சரண்

சென்னை: கஞ்சா விற்பது பற்றி  போலீசாருக்கு தகவல் தெரிவித்த அதிமுக பிரமுர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோழவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 பேர் போலீசில் சரணடைந்தனர். தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம், எம்ஜிஆர் நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (32), அதிமுக கிளை செயலாளர். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிலம்பரசன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், சிலம்பரசனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பினர். தகவலறிந்து, சோழவரம் போலீசார்  சம்பவ இடத்துக்கு   விரைந்து வந்து, சிலம்பரசன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (எ) ஆகாஷ் (22), ரஞ்சித்குமார் (23) ஆகியோர் இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவில் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் இந்த பகுதியில் கஞ்சா விற்பதாக சிலம்பரசன் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை வெட்டி படுகொலை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கஞ்சா விற்பதை போலீசுக்கு தெரிவித்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை: சோழவரம் அருகே பயங்கரம்; போலீசில் 2 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Mukudhagar ,Bharingram ,Cholhavaram ,Chennai ,Hornagaram ,Cholavaram ,Saran ,
× RELATED கஞ்சா சாக்லேட் கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது