×

வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் வீட்டில் என்எஸ்ஏ சோதனை

பூந்தமல்லி: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் தோணி மூலம் கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களை சுற்றுக்காவல் பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விழிஞ்சம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்து விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, கடந்த மே மாதம் ஆயுதத் தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2-ம் தேதி சுரேஷ், சவுந்தரராஜன் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேற்று சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் உள்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சென்னை வளசரவாக்கம், முரளிகிருஷ்ணா நகரில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சபேசன் (46) என்ற இலங்கை தமிழரின் வீட்டிலும் நேற்று தேசிய புலனாய்வு முகமையின் 5 அதிகாரிகள், வளசரவாக்கம் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினர். இதேபோல் திருவள்ளூரின் மப்பேடு பகுதியிலும் சோதனை நடந்தது. இச்சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், டேப்லெட் உள்பட 7 டிஜிட்டல் சாதனங்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது என தேசிய புலனாய்வு முகமை போலீசார் தகவல் தெரிவித்தனர்….

The post வளசரவாக்கத்தில் இலங்கை தமிழர் வீட்டில் என்எஸ்ஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NSA ,Kerala State ,Ernakulam District ,Vizincham Seabed ,Dinakaran ,
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி