ஹீரோ ஜீவா தனது காதலி ஹரிஷ்மிதாவை ரயிலில் பறிகொடுக்கிறார். இந்நிலையில், ஒரு படம் இயக்க அவருக்கு ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுக்கிறார். ஹீரோயினுக்கான தேர்வு நடக்கும்போது, ஜீவாவின் இறந்த காதலி நேரில் வருகிறார். இதன் பின்னணியை சொல்கிறது படம். புதுமுகம் ஜீவா தனது கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். மறைந்த ஸ்டண்ட் நடிகர் ஜஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின் மகளுமான ஹரிஷ்மிதாவுக்கு அதிக ஸ்கோப் கொண்ட கேரக்டர். சிறப்பாக நடித்துள்ளார். வில்லன் கிடையாது. ஹீரோ, ஹீரோவின் கனவுதான் வில்லன்.
முக்கிய வேடங்களில் வரும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோர் கவனத்தை ஈர்த்துள்ளனர். மென்மையான காதல் கதைக்கு குளுமையான ஊட்டியை தேர்வு செய்தது சிறப்பு. சாலமன் போவாஸ் இளமாறன் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன் வசனங்கள் யதார்த்தமாக இருக்கின்றன. எஸ்.பி.அஹமத் எடிட்டிங் ஷார்ஃப். ஒரு பாடல் மட்டுமே இருப்பது ஆறுதல். எம்.ஆர்.பாரதி கதை எழுதி இயக்கியுள்ளார். ‘காதலர்கள் தோற்கலாம், காதல் தோற்காது’ என்பதை 90 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார். பட்ஜெட் கைகொடுத்து இருந்தால், படம் அதிக பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
