ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 20: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு படப்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை. காவலாளிகள், பணியில் இருந்தனர்.இந்நிலையில், இத்தொழிற்சாலையின் முதல் மாடியில் நேற்று அதிகாலையில் திடீரென கரும்புகை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனே காவலாளிகள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அவர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் முதல் தளத்தில் பரவிய தீயை சுமார் 3 மணிநேரம் போராடி அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த மின் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு 50 லட்சம் என கூறப்படுகிறது. புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்….
The post கார் உதிரிபாக தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.