சென்னை: ‘மன அழுத்தம் காரணமாகவே மது குடிக்கிறார்கள்’ என்று நடிகை கோமல் சர்மா கூறியுள்ளார். சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. பிரகாஷ்.என் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகை கோமல் சர்மா பேசியதாவது: இந்த படத்துக்கு ‘குடிமகான்’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக குடிமகன்களுக்கு அறிவுரை எதுவும் கூற விரும்பவில்லை. யாரும் விரும்பி குடிகாரர்களாவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, சுற்றி இருக்கும் நண்பர்கள் தூண்டுதல், குடும்ப பிரச்னைகள், மன அழுத்தம் ஆகியவைதான் குடிகாரர்கள் உருவாவதற்கு காரணம். மது குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள்.
மது அருந்துகிறவர்களை அவமானமாக பார்க்காமல், அவர்களை நோயாளியாக பார்க்க வேண்டும். அவர்களிடம் கூடுதலாக அன்பு செலுத்த வேண்டும். குடிக்காதே என்று சத்தமாக சொல்வதை விட, குடியால் ஏற்படும் தீமைகளை அன்போடு எடுத்துச் சொன்னால் குடிக்க பழகியதை போன்றே குடிப்பதை விட்டு விலகியும் விடுவார்கள். அன்பால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை. இந்த படத்தில் குடிமகன்களை அப்படித்தான் அணுகியிருக்கிறார்கள். ஒரு பிரசார படமாக இல்லாமல் பக்கா கமர்ஷியல் படமாகவும் இதனை உருவாக்கி இருக்கிறார்கள். நல்ல கருத்துடன் வரும் படங்களை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.