×

சொத்துகளை பிரித்து வாங்கி வரும்படி மணமகன் டார்ச்சர்: வரவேற்பு முடிந்ததும் மணமகள் தற்கொலை

திருமலை: திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில்  சொத்துக்களை வாங்கி வரும்படியும், வேலைக்கு செல்லும்படியும் மணமகன் வற்புறுத்தியதால் மணமகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகள் ரவளி (22). அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இருவரது குடும்பத்தினரும் சந்தோஷ்-ரவளி ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. நேற்று திருமணம் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் இரவு மெகந்தி நிகழ்ச்சி, திருமண வரவேற்பு போன்றவை என திருமண வீடு களைகட்டியது. சந்தோஷ், ரவளி மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள், தோழிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது ரவளி, சினிமா பாடலுக்கு தனது தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சந்தோஷ், ரவளி ஆகியோர் விருந்து சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை திருமணத்திற்காக ரவளியை அலங்காரம் செய்து தயார் படுத்துவதற்காக உறவினர்கள் மணமகள் அறைக்கு சென்று கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரவளி மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர், ரவளியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.இதுகுறித்து ரவளியின் தந்தை பிரபாகர், நவிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நவிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவளியின் செல்போனை ஆய்வு செய்தனர். கடைசியாக மணமகன் சந்தோஷிடம் நீண்ட நேரமாக பேசியது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல வேண்டும். பெற்றோர் பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து வாங்கி வரவேண்டும் என கூறி ரவளிக்கு சந்தோஷ் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்த ரவளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரவளியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post சொத்துகளை பிரித்து வாங்கி வரும்படி மணமகன் டார்ச்சர்: வரவேற்பு முடிந்ததும் மணமகள் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Groom ,Torcher ,Tirumalai ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...