தமிழகத்தில் சில நாட்களாக குழந்தைகள் அனைவருக்கும் ஆன்லைன் வழியே வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதுகுறித்து நடிகர் ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நீங்கள் எல்லாம் குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் எல்லாம் நமக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதிலும், கடந்த சில வாரங்களாக சின்ன குழந்தைகளுக்கு ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எல்லாம் 7.30 மணியில் இருந்து 2.30 மணி வரை, 8.30 மணியில் இருந்து 3.30 மணி வரை என்று, 7 மணி நேரம் குழந்தைகளுக்கு வகுப்பு வைக்கும்போது, அந்த மன உளைச்சலை அவர்களால் எப்படி கையாள முடியும். மனரீதியாக, உடல்ரீதியாக எவ்வளவு பாதிப்பு மற்றும் கழுத்து, கண் எப்படி பாதிக்கப்படும் என்று யோசியுங்கள்.
மாணவர்களுக்கு எதாவது செய்தால் மட்டுமே பள்ளி கட்டணம் கேட்க முடியும். என்ன செய்தீர்கள் என்று பணம் கட்டும் பெற்றோர் கேட்பார்கள். எனவே, வகுப்புகளை ஆரம்பித்துவிட்டனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை பதிவு செய்து, அதை அப்லோட் செய்கிறார்கள். குழந்தைகள் விருப்பப்படும் நேரத்தில் பார்க்கிறார்கள். அப்படி பார்த்துவிட்டு, இந்த தருணத்திற்குள் அதை முடித்தால் போதும் என்று சொன்னால் செய்துவிட போகிறார்கள். வாரத்துக்கு ஒரு பாடம் அல்லது ஒருநாளைக்கு ஒரு பாடம், இரண்டு மணி நேரம் மட்டும் என, எவ்வளவோ மாற்றுவழிகளை யோசிக்கலாம். இந்த இணைய வகுப்பை எப்படி நடத்தலாம் என்பதை மீண்டும் யோசியுங்கள். இதை ஒரு சாதாரண பெற்றோராக கேட்டுக்கொள்கிறேன்.