ஆலந்தூர்: பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் தொடர்ந்து கசிந்து வரும் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவற்றை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், மூவரசன்பட்டு, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தங்களது பகுதியில் இருந்து தாம்பரத்துக்கு எளிதாக செல்லும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் பழவந்தாங்கல் பகுதியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதையில், தற்போது சிமெண்ட் சாலைகளில் ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சுரங்கப்பாதை மேம்பாலமாக மாற்றியமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனினும், அதற்கான எவ்வித பணிகளும் துவங்கப்படாமல் அறிவிப்போடு நின்றுவிட்டது. இதனால் இந்த சுரங்கப் பாதையில் உள்ள சிமெண்ட் சாலைகளில் காணப்படும் விரிசல்கள் மற்றும் உடைப்புகளின் வழியே தற்போது கழிவுநீர் கசிந்து, சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது.இதையடுத்து, இந்த சுரங்கப்பாதையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் சரிவிலிருந்து மேலேறும் இருசக்கர வாகன ஓட்டிகள், கழிவுநீர் கசிவினால் கான்கிரீட் சாலையில் சறுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, நாளொன்றுக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் பயணித்து வரும் இந்த சுரங்கப்பாதையை உடனடியாக சீரமைக்க அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்….
The post பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் கசிந்துவரும் கழிவுநீரால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.