ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் அருகே தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு கொட்டி எரிப்பதால் காட்டரம்பாக்கம் கிராம மக்கள் மூச்சுதிறணல், சுவாச கோளாறு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் வகையில் சிப்காட் அமைந்துள்ளது. சிப்காட் வளாகத்தில் கார் தொழிற்சாலை மற்றும் 500க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள் மற்றும் ரசாயன கழிவை அப்புறப்படுத்த அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஒப்பந்தம் எடுத்தவர்கள் ரசாயன கழிவுகளை டேங்கர் லாரி மற்றும் கனரக லாரிகள் மூலம் எடுத்து சென்று காட்டரம்பாக்கம் கிராமத்தில் கொட்டி எரித்து வருகின்றனர். மேலும் ஊராட்சி எல்லையை ஒட்டியுள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி அருகில் ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர். இரவு நேரத்தில் குப்பை கழிவை எரிக்கின்றனர். இதனால் காட்டரம்பாக்கம் கிராமம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுதிணறல், சுவாச கோளாறு போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி குப்பை தொட்டியாக மாறிவருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் போலீசார், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர், குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை, ஊராட்சி மன்ற தலைவர் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கிராம மக்களின் நலனில் அக்கறை கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரி அருகில் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு கொட்டி எரிப்பதை தடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….
The post தொழிற்சாலை ரசாயன கழிவு எரிப்பதால் காட்டரம்பாக்கம் மக்களுக்கு மூச்சுதிணறல் நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.