×

மாநகர பஸ் மேற்கூரை மீது நின்று கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: வீடியோ வைரலால் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரைகளில் மீது நின்று பயணம் செய்வதும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த போலீசாரும் போக்குவரத்துக்கழக  அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களை கடுமையாக எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் பல பகுதிகளில் பஸ் படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 15 கோயம்பேடு மேம்பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர், பஸ்சின் படிக்கட்டுகளிலும் மேற்கூரைகளிலும் பேருந்தின் பக்கவாட்டிகளிலும் தொங்கியபடி பயணம் செய்தபடி சினிமா, கானா பாடல்களை பாடிக்கொண்டு ஆட்டம் போட்டனர். இதனால் பஸ்சில் பயணம் செய்த மக்கள் கடும் சிரமப்பட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்த வீடியோ காட்சி உயரதிகாரிகளின் பார்வைக்கு சென்றதால் சம்பந்தப்பட்ட கோயம்பேடு சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் கூறும்போது, ‘’சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் நின்றுகொண்டு பாட்டுபாடி நடனமாடி செல்கின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி நின்றுகொண்டு கும்மாளம் போட்டுக்கொண்டு பெண் பயணிகளை கிண்டல் செய்கின்றனர். இதனால் பெண் பயணிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்லூரிகள் திறந்தபிறகு மாணவர்கள் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் தொடர்ந்து மோதிக்கொள்ளும் சம்பவம் அரங்கேறி வந்த நிலையில் சில மாதங்களாக தலை தூக்காமல் இருந்த மேற்கூரை பயணங்கள் தற்போது மீண்டும் தலை தூக்கி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் அட்டகாசம் செய்துவரும் கல்லூரி மாணவர்களை போலீசார் எத்தனை முறை எச்சரித்தாலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post மாநகர பஸ் மேற்கூரை மீது நின்று கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annagar ,Chennai, Chennai ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்