×

தமிழில் அறிமுகமாகிறார் அமிதாப் பச்சன்

இதுவரை ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்த் உள்பட பலர் கேட்டும் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வராமல் இருந்தார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். அவரை உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வருகிறார், இயக்குனர் தமிழ்வாணன். இதற்கு முன் எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா நடித்த ‘’கள்வனின் காதலி’’, ‘’கல்லூரி’’ அகில் நடித்த ‘’நந்தி’’, ஜீவன் நடித்த ‘’மச்சக்காரன்’’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த இரு வருடங்களுக்கு முன் மும்பை சென்று அமிதாப் பச்சனை சந்தித்து கதை சொன்னார்.

இந்தக் கதை அவரைப் பெரிதும் கவர்ந்தது. ‘’உயர்ந்த மனிதன்’’ என்று தலைப்பு சூட்டப்பட்ட நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்த அமிதாப் பச்சன், இதில் சென்னையிலிருந்து மும்பைக்கு வந்த சீனித்தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன் படம் என்றாலும், இன்னொரு இளம் ஜோடி நடிக்கிறது.

அதில் எஸ்.ஜே.சூர்யாவும், அவரது ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கின்றனர். மற்ற கேரக்டர்களில் மும்பையைச் சேர்ந்தவர்கள் பலர் நடிக்கின்றனர். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ்வாணன் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மும்பையில் தொடங்கியது.

அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யா, தமிழ்வாணன் இருக்கும் போட்டோக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழ்வாணனிடம் கேட்டபோது, ‘’அமிதாப் பச்சனை நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வைப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நான் சொன்ன ‘’உயர்ந்த மனிதன்’’ கதை அவருக்கு மிகவும் பிடித்ததால், தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் அவரே டப்பிங் பேசுகிறார்’’ என்றார்.

Tags : Amitabh Bachchan ,
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...