×

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கடித்த 2 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த தந்தை: திருவள்ளூரில் பரபரப்பு

சென்னை: நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் இரண்டு பாம்புகளுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி மணி மற்றும் எல்லம்மாள். இவர்களது மகன் முருகன் (7).  இவனது பெற்றோர் கூலி தொழிலாளிகள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் எப்படியோ வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்புகள் இரண்டு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் முருகனை கடித்துவிட்டு அவன்  மேலேயே படுத்துக் கிடந்தன. தற்செயலாக விழித்த அவனது தந்தை  மணி பாம்புகள் மகன் மீது கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த இரண்டு பாம்புகளையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு மகனையும் அழைத்துக்கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சைப் பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கையில் 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு மகனுடன் சென்றார். இது, மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுவன் முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணனை தொடர்ந்து தம்பியும் பரிதாப சாவு பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன்கள் ரமேஷ் (14), தேவராஜ் (13. ஆரணியில் உள்ள அரசுப் பள்ளியில், ரமேஷ் 9ம் வகுப்பும்,  தேவராஜ் 8ம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 4ம் தேதி இரவு சிறுவர்கள் இருவரையும் கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். கடந்த 5ம் தேதி  காலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். பாம்பு கடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை கடித்த 2 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த தந்தை: திருவள்ளூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Chennai ,Thiruvallur district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...