×

திமுக முப்பெரும் விழாவில் முன்னோடி திட்டமாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: இந்தியாவின் முன்னோடி திட்டமாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் துவக்க விழா நடைபெறுகிறது. எனவே, விருதுநகர் விழாவில் ஏராளமான திமுக தொண்டர்கள் வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இது நமக்கான மாதம், திராவிடருக்கான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம் தான். பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான். பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திமுக பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம் தான். அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.  நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர், செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவை முன்னெடுத்து, திமுகவின் கொள்கை, பார் மீது பட்டி தொட்டியெங்கும் முழங்கும் சீர்மிகு திருவிழாவாக நடத்தி, நமக்கெல்லாம் நல்வழி காட்டியிருக்கிறார். அறிவாலயம் திறக்கப்பட்டதும் 1987ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் தான். முப்பெரும் விழாவின் ஒரு விழாவாக, தொண்டர்களின் உணர்வுப் பிரவாக விழாவாக அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோது தான், திமுகவின் இளைஞரணி சார்பில் வெண்சீருடையில் அணிவகுப்பை நடத்திக் காட்டினோம். அதுவரை ஊர்வலம் என அழைக்கப்பட்டு வந்த திமுக அணிவகுப்புகள், அன்று முதல் பேரணி என்ற நிரந்தரப் பெருமையைப் பெற்ற வரலாறும் முப்பெரும் விழாவுக்கு உண்டு. இளைஞரணியின் செயலாளராக இருந்த என்னுடைய பங்கும் அதில் உண்டு என்பதில் உடன்பிறப்பாக, உங்களில் ஒருவனாக மன மகிழ்ச்சி கொள்கிறேன்.  முப்பெரும் விழாவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தம் திருப்பெயர்களில் விருதுகள் வழங்கிடும் நிகழ்வை நம் உயிர்நிகர் தலைவர் தொடங்கி வைத்து, ஆண்டுதோறும் தொடர்ந்து அவற்றை வழங்கி வந்தார். அதன் தொடர்ச்சியாக, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும், நம் இனமானப் பேராசிரியர் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.இத்தனை சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது. விருதுநகரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை, ‘மருதிருவர்’ போல, திமுகவை அந்த மண்ணில் வளர்த்தெடுக்கும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இரவு-பகல் பாராது மேற்கொண்டு வருகின்றனர். விழா ஏற்பாட்டுப் பணிகளை உங்களில் ஒருவனான நானும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய் திரண்டுவரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், திமுக தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன். செப்டம்பர் 15, திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிகளில் இலவச உணவு வழங்கிய இயக்கம் தான் திராவிட இயக்கம். அன்று நீதிக்கட்சி இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் செயல்பட்டது. அந்த நீதிக்கட்சியின் நீட்சியாக, திமுகவின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது.சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கி வைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன்பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் ‘விருதை’ அழைக்கிறது. முப்பெரும் விழாவில் திமுகவின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்த போதும் கலங்கி நிற்காமல் திமுக காக்கும் பணியில் ஈடுபட்ட சம்பூர்ணம் சாமிநாதன். பதவிப் பொறுப்புகளைவிட திமுக கொள்கை வழிப் பயணமே லட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை ரா.மோகன், அண்ணா விருது பெறவிருக்கிறார். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பக் களமிறங்கி அயராது கட்சி பணியாற்றி இன்று திமுகவின் பொருளாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு எம்.பி., கலைஞர் விருது பெறவிருக்கிறார். அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார். குன்னூர் சீனிவாசன் பேராசிரியர் விருது பெறவிருக்கிறார். இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் திமுகவின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது. முத்தாய்ப்பாக, கலைஞர் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில் தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது. ‘உடன்பிறப்பே..’ என்று அவர் அழைத்தால், செவிமடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ. எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது.நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் திமுகவை கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன். செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக. வெற்றி வரலாறு படைத்திடுவோம். உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற வேண்டும்….

The post திமுக முப்பெரும் விழாவில் முன்னோடி திட்டமாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,India ,Virudhunagar ,DMK Tribune ,M.K.Stal ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்...