×

நாவலூரில் மதுபோதையில் விபரீதம்; கட்டுமான தொழிலாளி அடித்துக்கொலை

திருப்போரூர்:  நாவலூர் கட்டுமானத்தொழிலாளர்கள் 3 பேர் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டார்.சென்னைப் புறநகர் பகுதியான நாவலூரில் தாழம்பூர் செல்லும் சாலையில் பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை 26ம் தேதி இரவு 9.30 மணியளவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர்தாஸ் (26), ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரஷீத் ஷேக் (31), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரபி என்பவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது, மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், ரஷீத் ஷேக் தள்ளி விட்டதில் சங்கர்தாஸ் என்பவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டு மயங்கினார். இதனிடையே அவர் மதுபோதையில் மயங்கி விட்டதாக நினைத்த மற்ற இருவரும் தங்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கட்டிடப் பணிகள் செய்ய மற்ற தொழிலாளர்கள் வந்தனர். ஆனால், சங்கர்தாஸ் வேலைக்கு வரவில்லை. இதுகுறித்து கட்டிட உரிமையாளர் பிரசாந்த் விசாரித்துள்ளார். அப்போது, நேற்று முன்தினம் நடந்த சண்டை குறித்து சக தொழிலாளர்கள் விவரித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் சங்கர்தாஸ் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர்தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்பேரில்,தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு, எஸ்.ஐ. கமல தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்தது. இந்நிலையில் சங்கர்தாஸ் இறந்த தகவலறிந்ததும் அவரை தாக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் ஷேக் மாயமானார். தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.      …

The post நாவலூரில் மதுபோதையில் விபரீதம்; கட்டுமான தொழிலாளி அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Nawalur ,Navalur ,Dalhampur ,Chennai ,
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...