×

கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு மழையினால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை: நிர்வாக இயக்குனர் பிரபாகர் தகவல்

சென்னை: கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்  மூட்டைகளுக்கு மழையினால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை. 6,933 மெ.டன் கருப்பு  பாலித்தீன் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிறு கட்டி பாதுகாக்கப்பட்டு  வருகிறது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் சுமார்  6,933 மெ.டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டது என்று செய்திகள் வந்ததையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் மண்டல மேலாளர் கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை கடந்த 24ம் தேதி ஆய்வு செய்தார். அங்கு திறந்தவெளியிலிருந்த நெல் மூட்டைகள் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் முதல் நாள் பெய்த மழையில் ஏதும் நனையவில்லை என்பது தெரியவந்தது. இந்த மையத்தில் ஒரு அட்டியில் உள்ள நெல் மூட்டைகள் சரிந்து விட்டதால் அதை சரியாக அடுக்கும் போது சிலர் அதை படமெடுத்து மழையில் நனைந்ததாக காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளுக்கு மழையினால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை என்பதோடு சேமிப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள 64 அட்டிகளும் (6,933 மெ.டன்) கருப்பு பாலித்தீன் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிர் கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில்  உள்ளன. திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கவும், நெல் மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை நேரில் ஆய்வு செய்து இங்குள்ள நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோன்று வருங்காலங்களில் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாக்கவும் இதுபோன்று புகார் மற்றும் செய்திகள் வராமல் தடுக்கவும் மேற்கூரையிட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு மழையினால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை: நிர்வாக இயக்குனர் பிரபாகர் தகவல் appeared first on Dinakaran.

Tags : konthankudi ,executive director ,prabhagar ,chennai ,kothankudi ,Managing Director ,
× RELATED தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் பட்டமளிப்பு விழா