சென்னை: ‘பிரியமுடன்’, ‘ஜித்தன்’, ‘இரானியன்’, ‘யூத்’ உள்பட பல படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. அவர் அடுத்ததாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி உருவாக்கும் படம் ‘சுப்பிரமணி’. இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் ராகுல் பரமஹம்சா இயக்குகிறார். எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சவுந்தர்யா வழங்குகிறார். படம் குறித்து வின்சென்ட் செல்வா கூறியது: உலகப் புகழ் பெற்ற பல இயக்குனர்கள், நாயை வைத்து ஒரு படமாவது எடுத்து இருப்பார்கள். நாய்க்கும் மனிதனுக்கும் தொடர்பை சொல்லும் பல படங்கள் வந்துள்ளன. அதிலிருந்து வேறுபட்டு நான் ஏதாவது புதிதாக சொல்ல விரும்பி, ஆய்வில் ஈடுபட்டேன். அப்போது பெல்ஜியம் மில்லியனர் என அழைக்கப்படும் நாய் இனம், ராணுவத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை நாய் ராஜஸ்தானில்தான் நாடோடிகள் சிலர் வளர்த்து வருகிறார்கள். இதற்கு பஞ்சாரா நாய்கள் என அவர்கள் அழைக்கிறார்கள். ‘சுப்பிரமணி’ படம் க்ரைம் திரில்லர் கதையாகும். ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ரிச்சர்ட் நடிக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு உதவும் நாய்தான் பஞ்சாரா. தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் திவி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். ‘சலார்’ படத்தில் நடித்த ஜெயவாணி முக்கிய வேடம் ஏற்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
