×

சகல சித்திகள் அருள்வார் சண்முகர்

மும்மூர்த்திகளில் படைப்பின் கடவுளான பிரம்மனுக்கு தட்சன், காசிபன் என இரு புதல்வர்கள். வீரபத்திரரால் கொல்லப்பட்ட தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். காசிபன், மாயை என்ற அழகியோடு முதல் சாமத்தில் மனித உருவில் இணைந்து சூரபத்மனையும், இரண்டாம் சாமத்தில் சிங்க ரூபத்தில் இணைந்து சிங்கமாசூரனையும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து தாரகனையும், நான்காம் சாமத்தில் ஆடு உருவில் இணைந்து அஜமுகி என்ற அசுரப் பெண்ணையும் பெற்றெடுத்தனர்.

சிவனை நோக்கி  தவம் புரிந்த நால்வரும் பல வரங்களைப் பெற்றனர். இவர்களில் சூரபத்மன் மேற்கொண்ட கடும் தவத்தால் 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என்றும் கேட்டான். பிறப்பால் தோன்றும் உயிர்கள் யாவும் இறப்பை அடைய வேண்டியது நீதி என்று சிவன் கூற, சூரபத்மன் புத்திசாலித்தனமாக, பெண் வயிற்றில் பிறவாத நபரால் தான்  தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டு பெற்றான்.

இதன்பின்  தனது அசுர குலத்தின் உதவியோடு அண்ட சராசரங்கள் அனைத்தையும் அடக்கி ஆண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். பரமேஸ்வரன் தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறந்தார். (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார்.

தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக தோன்றின. அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்ட ஆறுமுகனை பார்வதி தேவி ஓர் உரு ஆக்கினாள். தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்த முருகன், தாய், தந்தை ஆசியோடு, ஞானவேல் பெற்று முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரனோ, பாலகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது என்று வீராவேசமாகக் கூறினான். கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி வசித்து வந்த சூரனை வீழ்த்த வந்த வீரனை  பரிகசித்தான்.  தன் உருவத்தைப் பெரிதாக்கி பாலகன் முருகனை பயமுறுத்தினான். அவன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான்.

மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான்.  நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்று கருதினான். கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். மாமரமாய் மாறிய அவன் மாயத்தோற்றத்தை ஞான வேலால் வீழ்த்தினார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்ததும் சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன்.

அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அவனின் ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி தனது வாகனமாகவும், கொடி சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி, கடற்கரையில் பஞ்ச லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின் கட்டப்பட்ட கோயில்தான் திருச்செந்தூர் கோயில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம்.

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்க பெருமான் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), தனது பிரதிநிதியான மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். இரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் பட்டணப் பிரவேசம் செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

Tags : Shanmukar ,
× RELATED பாதுகையின் பெருமை