×

நாகராஜரை வழிபடுங்கள் நம்பிக்கை உண்டாகும்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?நான் இது வரை எந்த செயலைச் செய்ய முயன்றாலும் அது பாதி வரை தான் நடைபெறுகிறது. அதற்கு மேல் செய்ய முடிவதில்லை. என்ன செய்ய நினைத்தாலும் அது முழுமையாக நடப்பதில்லை. இதற்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- கோபால், மும்பை.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உண்மையில் உங்கள்ஜாதகம் பலமானதே ஆகும். காளசர்ப்ப தோஷம் என்ற ஒரு குறை மட்டுமே உள்ளது. உங்கள்மீதும் நீங்கள் செய்யும் செயல் மீதும் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. உங்கள் நிலையை ஒரு சிறு கதையின் மூலம் விளக்குகிறேன். சந்தையில் இருந்து ஒருவன் ஆடு வாங்கிச் சென்றானாம். அவனிடமிருந்த ஆட்டினை அபகரிக்க நினைத்த அவனது நண்பர்கள் ஒரு திட்டம் தீட்டினர். முதலில் ஒருவன் அவனிடம் சென்று என்ன நாயை வாங்கிச் செல்கிறாய் என்று கேட்டானாம். இல்லை இது ஆடு என்று அவன் மறுத்து தன் வழியே தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து மற்றொருவனும் அவனிடம் சென்று என்ன நாயை கையில் பிடித்துக் கொண்டுதிரிகிறாய் என்று கேட்டானாம்.

இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக ஆட்டினை நாய் என்று சொல்லவே இவனுக்கு தன் மீதிருந்த நம்பிக்கை போய் உண்மையில் நாம் நாயைத்தான் ஆடு என்று நம்பி வாங்கி ஏமாந்துவிட்டோம் என்று எண்ணி தன் விதியினை நொந்துகொண்டே ஆட்டினை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட, நண்பர்கள் எளிதாக ஆட்டினை அபகரித்துக் கொண்டார்கள். இதுதான் உங்கள் வாழ்விலும் நடந்து வருகிறது. நீங்கள் சரியாகத்தான் செயல்பட்டு வருகிறீர்கள் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். சுற்றியுள்ளோர் சொல்வதை காதில் வாங்கி ஏமாறாதீர்கள். நீங்கள் செய்து முடித்த பணியை தவறு என்று சொல்லி உங்களை அதிலிருந்து அகற்றி அந்த பணியினை தான் செய்ததாகச் சொல்லி பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். ஜாதகப்படி தற்போது உங்களுக்கு நடந்து வரும் நேரம் மிகவும் சிறப்பாக உள்ளது. வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் இணைந்திருக்கும் நான்கு கிரஹங்கள் உங்களுக்கு அரிதான திறமையைத் தந்திருக்கிறார்கள். அடுத்தவர்களால் எளிதில் செய்ய முடியாத செயல்களை அநாயாசமாக செய்யும் வலிமை படைத்தவர் நீங்கள். நாகராஜ வழிபாடு என்பது உங்கள் வெற்றிக்குத் துணைபுரியும். அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் பலன் தரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டீர்களேயானால் தடைகள் காணாமல் போகும்.

?நான் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. சிறு வயதிலேயே தீவிபத்தில் என் பார்வை போய்விட்டது. அதன்பிறகு தமிழில் எம்.ஏ., எம்.பில்., வரை படித்துள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அரசு நடத்தும் தேர்வுகளை எழுதி வருகிறேன். நிரந்தர வேலை கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- உமாமகேஸ்வரி, மதுரை.

தீவிபத்தில் கண்பார்வையை இழந்தும்கூட நம்பிக்கையை இழக்காமல் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி மேற்படிப்பு வரை படித்திருக்கும் உங்கள் முயற்சிக்கு நிச்சயமாக பலன் கிட்டும். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டிலும், ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். மொழிப்பாடத்தில் நீங்கள் நிச்சயமாக உயர்வு காண இயலும். விரைவில் நீங்கள் கல்லூரி பேராசியராக பணியில் அமர்ந்துவிடுவீர்கள்.சந்திரனின் உச்ச பலம் நல்லதொரு வாழ்க்கைத் துணைவரைப் பெற்றுத் தரும். 01.02.2020 முதல் உங்களுக்கான நேரம் துவங்கிவிடுவதால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.


Tags : Worship Nagaraja ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்