×

கல்வி மற்றும் தொழில் கடன் பெற, சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன்  ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும் இருத்தல்வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல்வேண்டும். திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000 மும், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%  பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவிகளுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையினர் விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….

The post கல்வி மற்றும் தொழில் கடன் பெற, சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்; காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Aarti ,Tamil Nadu Minority Economic Development Corporation ,TOMCO ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...