×

நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு

சென்னை: பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என பத்திரிகையாளர் நலவாரியக் கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறைக் கூட்ட அரங்கில் நேற்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் நடந்தது. இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குனர் (செய்தி) அம்பலவாணன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான  தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்யன்  பாலசுப்பிரமணியன், முதன்மை சிறப்பு செய்தியாளர் லெட்சுமி சுப்பிரமணியன், செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், சிறப்பு செய்தியாளர் எம்.ரமேஷ்,  அலுவல்சார் உறுப்பினர்கள்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: இன்று (நேற்று) நடந்த பத்திரிகையாளர் நல வாரியக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களை எடுத்துக்கொண்டு, எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு, பத்திரிகையாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டம் குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் என்று சொன்னாலும்கூட, பத்திரிகையாளர்களின் நலன் கருதி தேவைப்படும் சமயத்தில் கூட்டத்தை முன்னரே கூட நடத்தலாம். கூட்டத்தில் வைக்கப்பட்ட பொருண்மைகள் முழுவதுமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முடிவு எடுத்து, அதன் பிறகு உங்களிடமிருந்து கருத்துகளை கேட்டறிந்து பரிசீலனை செய்வதைவிட, அதை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே உங்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. முதல்வரால் அமைக்கப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியம் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் பயனளிப்பதாக உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். …

The post நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Journalist Welfare ,Chennai ,Journalist Welfare Meeting ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி எல்லைகள்...