×

திருமண தடை நீக்கும் சுப்பிரமணியசுவாமி

அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பக்தர்களால் போற்றிப்பாடும் முருகப்பெருமான் தீராத வினைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் அற்புதக்கடவுள். அந்த வகையில் புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தர விநாயகர் , ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் 160 வருடங்கள் பழமையானது. ஆரம்பகாலத்தில் சுந்தரவிநாயகர், சுப்பிரமணியர், வீரராகவப்பெருமாள் மற்றும் நவக்கிரகம் ஆகிய கடவுளர்கள் அருள்பாலித்து வந்தனர். தொடர்ந்து 1970ல் கோயில் திருப்பணி செய்யப்பட்டு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீ காமாட்சி அம்மன் சுவாமிகள் ஸ்தாபிதம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1979ம் ஆண்டு ஸ்ரீவிஷ்ணு துர்க்கை அம்மன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி,  ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகள் அமைக்கப்பட்டு, திருமண மண்டபமும் கட்டப்பட்டு 3111994ல் அப்போதைய முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முக்கிய விழாக்கள்


ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிக்கு காவடி உற்சவம், சுவாமி வீதி உற்சவம் நடைபெறுகிறது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு வீதி உலா, ஆடி மாதம் முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்து மூன்றுநாள் திருவிழா நடைபெறும். கிருத்திகை தினத்தன்றும், ஆடி கிருத்திகை, தை கிருத்திகைகளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது. இதுதவிர கந்தசஷ்டி விழா, நவராத்திரி, சிவராத்திரி, அன்னாபிஷேகம் நடக்கிறது. புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்தக்காலத்தில் 8 வாரங்கள் துர்க்கையை வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி சிறப்பான இல்லற வாழ்வு அமையும் என்பது ஐதீகம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நடக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடு நடக்கிறது.

திருமண தடை நீங்கும்

முருகன் கோயில்களிலேயே பழனி கோயிலுக்கு அடுத்து மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் முருகப்பெருமான் காராமணிக்குப்பம் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி தான். இதனாலேயே புதுச்சேரி மக்கள் இந்த முருகனை பக்தி பரவசத்துடன் வழிபட்டு பலன் அடைகிறார்கள். மேலும் பரிகாரமூர்த்தி என்றும் இங்குள்ள முருகப்பெருமான் அழைக்கப்படுகிறார். மேலும் அங்காளபரமேஸ்வரி, பஞ்சமுக விநாயகர், அஷ்டதுர்க்கை, காலபைரவர், சரஸ்வதி, லட்சுமி ஆகிய பரிகார மூர்த்திகளும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டால் திருமணதடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம், தீராத நோய்கள் நீங்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

செல்வது எப்படி?

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார்  ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

Tags : Subramaniam Swami ,
× RELATED திண்டிவனம் அருகே உள்ள மயிலம்...