×

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலப் பணியை விரைந்து முடிங்க…-வாகன ஓட்டிகள் கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சிலுத்தூர் செல்லும் சாலையில் பாலகிருஷ்ணாபுரத்தில் சென்னை, கரூர், பழனி ஆகிய ஊர்களுக்கு செல்லும் ரயில் பாதை உள்ளது. இதனால், இப்பகுதியில் அடுத்தடுத்து 3 ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ‘கேட்’களை கடந்து பாலகிருஷ்ணாபுரம், செந்துறை, அதிகாரிபட்டி, வி.எஸ்.கோட்டை, ராஜக்காபட்டி, சிறுகுடி, மலைக்கேணி, ஜம்புளியம்பட்டி, கம்பிளியம்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 3 ரயில்வே கேட்களை கடந்து  திண்டுக்கல்லுக்கு வர வேண்டும். இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையின்பேரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 1 கி.மீ. தொலைவிற்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதனால், செந்துறைக்கு செல்லும் பஸ்கள் மாற்றுவழியாக மாலைப்பட்டி, ஆத்துப்பட்டி, ஜம்புளியம்பட்டி வழியாக 5 கி.மீ தூரம் சுற்றி செல்கிறது. அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல்லிருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் எம்.எஸ்.பி பள்ளி, ஆள் இல்லாத ரயில்வே கேட், மாசிலாமணிபுரம், ஸ்ரீநகர் வழியாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையில் செல்கின்றன. மேலும், இந்த மூன்று வழித்தடங்களிலும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் மூடிக் கிடக்கிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பணிகளை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போட்டனர். எனவே, இந்த மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பாலப் பணியை விரைந்து முடிங்க…-வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dindigul Balakrishnapuram ,Dindigul ,Balakrishnapuram ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...