முடி திருத்தும் தொழிலாளியான விஜய் சேதுபதி, லட்சுமியை காணவில்லை எனக் கூறி போலீசில் புகார் தர வருகிறார். அந்த லட்சுமி யார் என்றால் விஜய் சேதுபதியிடம் பதில் இல்லை. ஒரு கட்டத்தில் லட்சுமியை கண்டுபிடித்து தந்தால் 5 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று அவர் கூறியதும் போலீசார் தீவிரமாக லட்சுமியை தேடுகிறார்கள். மறுபுறம் வில்லன் அனுராக் காஷ்யப் விஜய் சேதுபதியை தாக்குகிறார். இதற்கெல்லாம் சஸ்பென்சுடன் பதில் சொல்கிறது படம்.
‘குரங்கு பொம்மை’ நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கதையும், இடைவேளையும், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. 50வது படம் என்பதால், டிரேட் மார்க் நடிப்பை வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. மகள் மீது பாசமும், லட்சுமி பற்றி ஒரே ஸ்டைலில் சொல்லி சிரிக்க வைப்பதும், லட்சுமி யார் என்று உணர வைக்கும் கொடிய தருணமும், மகளின் விருப்பத்துக்காக வில்லனைச் சந்திப்பதுமாக, அதிக பொறுப்புடன் நடித்திருக்கிறார். ஜோதியாக வரும் சாச்சனா நேமிதாஸ், பொருத்தமான தேர்வு.
கணவனை நம்பி ‘தங்கமே’ என்று பாசத்தைப் பொழியும் அபிராமி, பச்சோந்தி வேடமிடும் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, பாரதிராஜா, சிங்கம்புலி, அருள்தாஸ், முனீஷ்காந்த், ‘பாய்ஸ்’ மணிகண்டன், கல்கி ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர். தினேஷ் புருஷோத்தமனின் கேமரா காட்சிகளின் தன்மையைக் கெடுக்காமல், இயல்பாகப் பதிவு செய்துள்ளது.
அஜனீஷ் பி.லோக்நாத்தின் பின்னணி இசை, கதையின் போக்கை மாற்றாமல் கொண்டு செல்கிறது. வன்முறை காட்சிகள் ஓவராக இருப்பது நெருடுகிறது. விஜய் சேதுபதியின் குணாதிசயத்துக்கான காரணத்தைச் சரிவர சொல்லவில்லை. அனுராக் காஷ்யப்பின் குற்றச்செயல்களை போலீசால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. என்றாலும், திரில்லாக படத்தை கொண்டு செல்கிறார்கள்.
The post மகாராஜா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.