×

என்னை சந்திக்க ரூ.5 லட்சம் வேண்டும்: அனுராக் காஷ்யப் ‘கறார்’

மும்பை: பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளரும் மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்து வருபவருமான அனுராக் காஷ்யப், தமிழில் திரைக்கு வந்த ‘இமைக்கா நொடிகள்’, ‘லியோ’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘ஒன் 2 ஒன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் தன்னை நேரில் யாராவது சந்தித்துப் பேச வேண்டும் என்றால், லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று கறாராக கூறியுள்ளார்.

இந்தப் பதிவு ரசிகர்களை மட்டுமின்றி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து அனுராக் காஷ்யப் கூறியிருப்பதாவது: சினிமா சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பேச, தினமும் என்னை நேரில் சந்திக்க பலர் வருகின்றனர். புதுமுகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், சுமாரான சில படைப்பு களை நான் ஊக்குவித்து விட்டேன். எனவே, தங்களை மிகப்பெரிய ‘கிரியேட்டிவ் ஜீனியஸ்’ என்று நினைத்துக்கொண்டு வருபவர்களிடம், இனிமேல் எனது நேரத்தை நான் செலவிட விரும்பவில்லை.

எனவே, இனிமேல் என்னை நேரில் சந்தித்து, 10 முதல் 15 நிமிடங்கள் வரை என்னுடன் பேச வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாயும், அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 2 லட்ச ரூபாயும், அதுவே ஒரு மணி நேரம் என்றால் 5 லட்ச ரூபாயும் பணம் கொடுத்தால்தான் பேச முடியும். உங்களால் அப்பணத்தை அட்வான்சாக கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள். இல்லை என்றால் விலகி இருங்கள். இதுபோன்ற பல சந்திப்புகளால் எனது பொன்னான நேரத்தை வீணடித்து விட்டேன். இனிமேல் நான் கேட்கும் பணத்தை உங்களால் தர முடியும் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள்.

The post என்னை சந்திக்க ரூ.5 லட்சம் வேண்டும்: அனுராக் காஷ்யப் ‘கறார்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anurag Kashyap 'Karaar ,Mumbai ,Bollywood ,Anurag Kashyap ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில்...