அன்னூர் : அன்னூரில் பட்டியில் புகுந்து மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்துக் கொன்று சென்றது. மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை அன்னூர் அருகே ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சச்சின், நூர் முகம்மது, பிரதோஷ். இவர்கள் அன்னூரில் பழக்கடை நடத்தி வருகின்றனர். மேலும் அன்னூரில், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஜீவா நகரில் ஆட்டு பட்டி வைத்து ஆடு வளர்ப்பு தொழிலிலும் ஈடபட்டு வருகின்றனர். இதில் 2 ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்தப் பகுதிக்கு சென்ற பொதுமக்கள் ஆடுகள் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் வந்து பார்த்தபோது கட்டிய நிலையிலேயே இரண்டு ஆடுகள் கடித்து குதறப்பட்டு குடல் வெளியே தள்ளப்பட்ட நிலையில் இருந்தன. இரண்டு குட்டி ஆடுகளின் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு வெளியே வீசி கிடந்தன. ஒரு ஆட்டின் சதைப்பகுதி அனைத்தும் தின்ற நிலையில் கிடந்தது. மேலும் ஆடுகள் பலியான இடத்தில் சிறுத்தையின் கால் தடம் போல் இருந்தது. அதற்கான அறிகுறிகள் இருந்ததை பார்த்த உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலர்களுக்கும், அன்னூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு அன்னூரை ஒட்டி ஆம்போதி, குமாரபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தற்போது மீண்டும் மர்ம விலங்கு அன்னூர் நகருக்குள் வந்து ஆடுகளை கடித்து கொன்றது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினர் ஆய்வு சம்பவயிடம் வந்து ஆய்வு செய்து ஊருக்குள் புகுந்த மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post கோவை அருகே 4 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு -சிறுத்தையா? மக்கள் பீதி appeared first on Dinakaran.