×

ஆடம்பர வாழ்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க சொந்த வீட்டிலேயே 12 சவரனை திருடிய பட்டதாரி இளம்பெண்: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்

சென்னை: டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தேவி (40). இவரது மகள் சந்தியா (22). பிஎஸ்சி பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சந்தியாவின் செல்போனை அவரது தாய் தேவி எடுத்து பார்த்தபோது, அதில், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் ₹80 ஆயிரம் கடன் பெற்றதாக எஸ்எம்எஸ் இருந்தது. இதுபற்றி மகளிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த 12 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். எனவே, கடையில் இருந்து புதிதாக நகை வாங்குவதற்காக, ஆன்லைன் செயலியில் ₹80 ஆயிரம் கடன் வாங்கினேன், என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தேவி இதுபற்றி தலைமை செயலக காலனி போலீசில் புகார் அளித்துள்ளார்.போலீசார், சந்தியாவை பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சந்தியா ஆடம்பரமாக வாழ்வதற்கு பணம் தேவைப்பட்டதால், பலரிடம் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை அடைப்பதற்காக வீட்டில் இருந்த 12 சவரன் நகைகளை திருடி, அதில் 5 சவரன் நகைகளை அமைந்தகரையில் உள்ள கடையில் அடகு வைத்து, ₹85 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள நகைகளை ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், அடகு வைத்த நகைகளை மீட்க ஆன்லைன் மூலம் ₹90 ஆயிரம் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால், ₹80 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, அடகு வைத்த நகையை மீட்க கூடுதல் பணம் தேவைப்பட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். இதனிடையே, கடன் வாங்கியது தொடர்பான எஸ்எம்எஸ்ஐ பார்த்து தாய் கேட்டதால், வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர் திருடியதாக நாடகமாடியுள்ளார். என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, சந்தியாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ஆடம்பர வாழ்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க சொந்த வீட்டிலேயே 12 சவரனை திருடிய பட்டதாரி இளம்பெண்: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Devi ,DP Chatram ,Sandhya ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த...