காசா: காசா வெகுஜன புதைகுழியாக மாறி வருவதாக ஹாலிவுட் நடிகை ஏஞ்செலினா ஜூலி இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து ஐ.நா தன்னார்வ அமைப்பின் பிரதிநிதியும், ஹாலிவுட் நடிகையுமான ஏஞ்சலினா ஜூலி வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட செயல் மிகவும் பயங்கரமான செயல். மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால், காசாவில் தற்போது நடக்கும் செயல்களை பார்க்கும் போது கவலையாக உள்ளது.
அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகிறது. காசா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருத்துவ தேவைகள் கூட கிடைக்காத நிலை உள்ளது. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களால் வெகுஜன புதைகுழியாக காசா மாறி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் தண்டிக்கப்படுவதை உலகம் கவனித்துக் கொண்டு தான் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அளித்த பேட்டியில், ‘உண்மையில் ஏஞ்சலினா ஜூலி காசாவிற்கு செல்லவில்லை.
அவரது கருத்தை நிராகரிக்கிறேன். காசாவின் உண்மை நிலைகளை அவர் பார்வையிடவில்லை. காசாவில் தற்போது போர் நடப்பது உண்மை. ஆனால் மக்கள் உயிர்வாழ முடியாத அளவிற்கான நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. இந்த போரின் முடிவானது காசா மக்கள் கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். பொதுமக்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டாம். தீவிரவாதிகளை வேரறுக்க இஸ்ரேலுக்கு உதவுங்கள்’ என்று கூறியுள்ளார்.
The post வெகுஜன புதைகுழியாக மாறியுள்ளது காசா: இஸ்ரேலுக்கு ஏஞ்செலினா ஜூலி கண்டனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.