- அண்ணாமலை
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- கே.எஸ்.அழகிரி
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- சத்தியமூர்த்தி
- பவன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசியதாவது:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைமையிலான அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால், தமிழக மக்களிடையே ஆளுநர் மீது கடும் எதிர்ப்பும், கொந்தளிப்பான நிலையும் நிலவி வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு தமிழக அரசை முடக்குகிற நடவடிக்கையை கண்டித்து தான் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதற்காக தமிழக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டுமென்று கூறியிருக்கிறார். ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட முறையில் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணாமலை கூறுவதை அரைவேக்காட்டுத்தனமாகவே கருதுகிறேன். தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நீட் மசோதா நான்குமுறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 210 நாட்களாகியும், ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் முடக்கி வருவதை கண்டிக்க விரும்பாத அண்ணாமலை, விதண்டாவாதம் பேசுவது மிகுந்த வேடிக்கையானது.தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்படும். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் பெருந்திரளானோர் பங்கேற்பார்கள். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், ரஞ்சன்குமார், டெல்லி பாபு, அடையார் துரை ஆகியோர் உடனிருந்தனர்….
The post தமிழக முதல்வரை பற்றி அண்ணாமலை கூறுவது அரைவேக்காட்டுத்தனம்: கே.எஸ்.அழகிரி பேச்சு appeared first on Dinakaran.
