×

உள்கட்டமைப்பு மேம்படுத்துவது, தரமான கல்வி வழங்குவதில் இந்திய துணைக்கண்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம்: நம் பள்ளி நம் பெருமை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி பள்ளியில், ‘நம் பள்ளி நம் பெருமை’ பள்ளி மேலாண்மைக்குழு – மறுகட்டமைப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர், துணை மேயர், தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  காகர்லா உஷா மற்றும் மாணவர்கள், பெற்றோர், அதிகாரிகள்  ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறு கட்டமைப்பு நிகழ்வை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். இத்தகைய பள்ளிப் பருவ காலத்தை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்குமென்றால், அது உங்களது கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள்,  பெற்றோர் ஆகியோரின்  சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் செய்தாலும் கல்வியும் தடம் புரண்டுவிடும்.உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்குத் நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள்.  மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பததை மட்டுமே அனைவரும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம். பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கியுள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவார்கள். பள்ளியில் குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் பள்ளி மேலாண்மைக் குழுவை நாம் இப்போது அமைத்திருக்கிறோம். குழந்தைகளின் கற்றல் அடைவை மேம்பாடு அடையச் செய்தல். பள்ளி வளங்களைப் பராமரித்தல். பள்ளியின் சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக்குதல், இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல். பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும். அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் குழந்தைகளைப் நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலை உருவாக்க வேண்டும். இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 20ம் தேதி 37,558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களில், மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமான  பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியினுடைய வரலாற்றில் இது முக்கியமான மைல் கல்.  அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒருசேர இதுபோல் பங்கேற்றது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை, ஒரு நிகழ்ச்சியின் சாதனையாக மட்டும் அல்ல, வரலாற்றுச் சாதனையாக, கல்விச் சாதனையாகவும் மாற வேண்டும்.  37,558 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். பள்ளிகளின் பெருமையை மீட்டெடுத்து, நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தமிழ்நாடு அரசு  முன்னெடுக்கக்கூடிய இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வாருங்கள் என்று உங்களை எல்லாம் மிகுந்த பணிவோடு, உரிமையோடு  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். …

The post உள்கட்டமைப்பு மேம்படுத்துவது, தரமான கல்வி வழங்குவதில் இந்திய துணைக்கண்டத்தில் தமிழகம் முன்னோடி மாநிலம்: நம் பள்ளி நம் பெருமை திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tiruvallikeni Wellington Seemati School ,Nam Palli Nam Ghut' School Management Committee ,M.K. Stalin ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...