×

தமிழகத்தை திராவிட இயக்கம்தான் தொடர்ந்து ஆளும்: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழக மண்ணை திராவிட இயக்கம்தான் தொடர்ந்து ஆளும் என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தில், கோபிச்செட்டிப்பாளையம் செங்கோட்டையன்(அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சிதான், பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம். எடப்பாடி முதல்வராக இருந்தபோது கூடுதலாக 18.1 சதவீதம் நிதி, பள்ளக்கல்வித்துறைக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 5684 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் இல்லை. காலிப் பணியிடங்களை உடனடியாக நிறப்ப வேண்டும். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பேசும்போது, இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம், 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறினார். அது தவறான தகவல். 2019-2020ல் அதிமுக ஆட்சியின்போதே, அரசு பள்ளிகளில் 51.4 சதவீதம் மாணவர்கள் உயர்த்தப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழகத்துக்கு வேண்டாம் என்பதுதான், அதிமுகவின் கொள்கை. ஆனாலும் அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் சிறப்பாக விளங்க வேண்டும் என்பதற்காக 492 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவானது. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதால், ஒரு லட்சத்து 98 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் ரூ.260 கோடி மட்டுமே செலவாகும். அதனால் தாலிக்கு தங்கம் திட்டத்தையும் தொடர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீட் தேர்வையும் எதிர்க்கிறோம். நீட்டுக்கான நுழைவுத் தேர்வையும், க்யூட் நுழைவு தேர்வையும் எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு இதுபோன்ற நுழைவுத் தேர்வே தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. திராவிட இயக்கம்தான் தொடர்ந்து இந்த மண்ணை ஆளும். அப்போது அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். சபாநாயகர் அப்பாவு: ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தில் ஒரு புள்ளியில் நிற்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது….

The post தமிழகத்தை திராவிட இயக்கம்தான் தொடர்ந்து ஆளும்: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravidian movement ,Tamil Nadu ,Sengottaiyan ,Chennai ,AIADMK MLA ,Legislative Assembly ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED இந்துத்துவ சக்திகளுக்கு தமிழ்நாடு மரணஅடி கொடுக்கும்: வைகோ பொளீர்