சென்னை:163 கோயில்களில் இடிதாங்கி பொருத்தும் பணி நடந்து வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட இருக்கிற அறிவிப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று இரண்டாம் நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து மண்டல அலுவலர்கள், அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: பக்தர்களின் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை துரிதமாக செயலாற்றி வருகிறது. கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் வருகிற சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட உள்ள அறிவிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. திருத்தணிகை, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 5 மலை கோயில்களில் கம்பி வட ஊர்தி வசதி செய்திட தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர்களால் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது. சோளிங்கர், ஐய்யர் மலை ஆகிய மலைக்கோயில்களில் புதிய ரோப் கார் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. கோயில்களின் நடைபெறும் அன்னதான திட்டம், மருத்துவ மையம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஆன்மிக அன்பர்களுக்கு வரப்பிரசாதமாகும். கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும். கோயில்களின் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும், தேவையான இடங்களில் புதிதாக பொருத்தப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து 9 கோயில்களில் இடிதாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. 163க்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு பேசினார்….
The post 163 கோயில்களில் இடிதாங்கி பொருத்தும் பணி நடக்கிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.