×

என் உயிர்த் தோழன் பாபு மரணம்

சென்னை: ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் நடித்த நடிகர் பாபு காலமானார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் பாபு. 1990ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்திற்கு கதை, வசனமும் எழுதியவர் பாபு. ஒரு அடிமட்ட அரசியல் தொண்டனின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சொன்ன படம் இது. தொடர்ந்து ‘பெரும்புள்ளி’, ‘தாயம்மா’, ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ படங்களில் பாபு நடித்தார். ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடித்தபோது டூப் போட மறுத்து, உயரமான இடத்திலிருந்து கீழே குதித்தார். இதில் பாபுவின் முதுகெலும்பு உடைந்து கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவ்வப்போது அவரை பாரதிராஜா பார்த்து உதவிகள் செய்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டு, சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். நேற்றுமுன்தினம் இரவு பாபு காலமானார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த ராசாராமின் சகோதரி மகன். ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் இளையராஜா இசையில், ‘ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா’, மற்றும் ‘குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன’ ஆகிய பாடல்கள் பிரபலமானவை. இந்த பாடல்களில் பாபு நடித்திருந்தார். மிகவும் திறமைசாலியான பாபு, இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தது பெரும் சோகமாக அமைந்துவிட்டது. பாபுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரதிராஜா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

The post என் உயிர்த் தோழன் பாபு மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Babu ,CHENNAI ,Bharathiraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...