×

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

சென்னை:  சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று காலை கலந்தாய்வு தொடங்கியது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 25 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,600 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜனவரி 18-ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் கடந்த ஜனவரி 18-ம் தேதி மாலை 5.30 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர், அலுவலகம், அறிவிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து இருந்து விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்கள் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 3,721 பேர் இடம் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 720-க்கு 625 மதிப்பெண்கள் எடுத்த சக்தீஸ்வரன் தரவரிசைப் பட்டியலில் முதலிடமும், 607 மதிப்பெண்களுடன் வி.ஸ்ருதி இரண்டாம் இடத்தையும், 589 மதிப்பெண்களுடன் பட்டுநிதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 82 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் 378 பேர் இடம் பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 761 பேரும் இடம் பிடித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் முதல் நாளான இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியது. இதையடுத்து அரசு பள்ளி ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவருக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆவணங்களை வழங்கினர். மேலும் தரவரிசைப் பட்டியல்கள் மற்றும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களை முழுமையாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்….

The post அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Unani ,CHENNAI ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…