×

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையிலான 3 அலங்கார ஊர்திகளை நாளை முதல் மெரினாவில் பொதுமக்கள் பார்க்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் 26.1.2022 அன்று குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகருக்குள் நேற்று (18ம் தேதி) மாலை இந்த மூன்று அலங்கார ஊர்திகள் வந்துள்ளது.  இந்த அலங்கார ஊர்திகள் வருகிற 20ம் தேதி (ஞாயிறு) முதல் 23ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும்.முதலாவது அலங்கார ஊர்தியில், முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு நடந்த சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர்புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கினை அழித்து தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன்சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய் போரிட்டு தூக்கிலிடப்பட்ட, மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சிதரும்.2வது அலங்கார ஊர்தியில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகர கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்டவரும் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி சமத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலைக்காக போராடிய பெரும்புலவன் மகாகவி பாரதியார், ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை தொடங்கியவரும், எஸ்.எஸ். காலியோ எனும் பிரெஞ்சு கப்பலை வாங்கியதால், தேசத் துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு, இரட்டை தீவாந்திர தண்டனை பெற்றவரும், “செக்கிழுத்த செம்மல்” வ.உ.சிதம்பரனார், விடுதலைக்காக போராடியவரும், “ஞானபானு” மற்றும் “பிரபஞ்சமித்திரன்” என்ற பத்திரிகைகளை தொடங்கி, தேச தலைவர்களின் அரிய தொண்டினை வெளியிட்டு தமிழகத்தில் விடுதலை தாகத்திற்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திர போராட்டத்திற்காக போராடியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மூன்றாவது அலங்கார ஊர்தியில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், ராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,  கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ்துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை, மாவீரன் பொல்லான், கொடிகாத்த திருப்பூர் குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும் சிறந்த இலக்கியவாதியுமான திருச்சிராப்பள்ளி வ.வே.சு. ஐயர், அனைவராலும் போற்றப்பட்ட கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதார பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகச்சீலர் கக்கன், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த மூன்று அலங்கார ஊர்திகளும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் வகையிலான 3 அலங்கார ஊர்திகளை நாளை முதல் மெரினாவில் பொதுமக்கள் பார்க்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marina ,Tamil Nadu ,Chennai Collector ,Chennai ,Chennai District ,Collector ,Vijaya Rani ,Republic Day ,India ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...