சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட விசாரணைக்கு யாருக்கெல்லாம் சம்மன் அனுப்பலாம் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், போயஸ்கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் என 157 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டன. 95% விசாரணை முடிந்த நிலையில், அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை முடித்து விட்டு, அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், ஆணையம் அதை ஏற்காததன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டன. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெறவில்லை. இந்த சூழலில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் நிபுணத்துவம் பெற்ற எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணையை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள். இந்த நிலையில், தற்போது மருத்துவக்குழு அமைக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பினர்களிடம் இன்று நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனையில் விசாரணைக்கு சம்மன் அனுப்ப வேண்டுபவர்களின் பட்டியலை சசிகலா மற்றும் அப்போலா தரப்பினர் ஆணையத்திடம் தருகின்றனர். இதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகவுள்ளவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது….
The post ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மீண்டும் சூடுபிடிக்கிறது: சசிகலா, மருத்துவமனை தரப்பிடம் இன்று ஆலோசனை; மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம் appeared first on Dinakaran.