
டெல்லி: ரூ.5 கோடி மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர். மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் தொழில் முறையில் அக்கு பஞ்சர் மருத்துவர் ஆவார். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இதனைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான ஐ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2018 டிசம்பர் மாதம் இவர் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி வரை ஏமாற்றிய மோசடி வழக்கில் டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார். இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், 2018 முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்தார். மேலும் திரைப்பட தயாரிப்பு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான நிதியை மோசடியாக திருப்பி அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. சென்னையில் இதேபோல் 6 மோசடி வழக்குகளில் தொடர்புடையதும் விசாரணயில் தெரியவந்தது. மேலும் அரசியல் கட்சிகளிலும் தொடர்பில் இருந்த சீனிவாசன் 2013 ஆம் ஆண்டு மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரூ.5 கோடி மோசடி வழக்கு: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்! appeared first on Dinakaran.
