×

சோடா வாங்க கணவர் பணம் தராததால் விரக்தி 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி: பெருந்துறையில் சோகம்

ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து, தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (28). இவரது மனைவி சகாயசெல்வி (25). இவர்களது மகன் வினித் (4), மகள் மாளவிகா (1). ரமேசும், சகாயசெல்வியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் மேட்டுப்புதூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக உள்ளார். கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சகாயசெல்விக்கு நேற்று காலை வயிற்று வலி ஏற்பட்டது. சோடா குடித்தால் வயிற்று வலி சரியாகிவிடும் என்று நினைத்த சகாயசெல்வி கணவரிடம் சோடாவுக்கு பணம் கேட்டார். ஆனால் ரமேஷ் பணம் தராமல் வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சகாயசெல்வி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள 60 அடி ஆழ கிணற்றின் அருகே சென்றார். கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசிவிட்டு தானும் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பார்த்தனர். அப்போது சகாயசெல்வி கிணற்றில் உள்ள ஒரு திட்டில் தத்தளித்தபடி இருந்தார். அவரை பத்திரமாக மீட்ட வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளை தேடியபோது அவர்கள் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post சோடா வாங்க கணவர் பணம் தராததால் விரக்தி 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி: பெருந்துறையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Perundhurai ,Erode ,Perundurai ,Vijayamangalam ,
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்