கடலூர், ஜூன் 23: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர். இதில் வஞ்சிரம் கிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் இருந்தபோது, கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. இதன் பின்னர் மறுநாள் மதியம் 1 மணிக்கு மேல் மீன்பிடிக்க செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் ஏராளமான படகுகள் வந்திருந்தன.
இதனால் மீன்கள் வரத்தும் அதிகளவில் இருந்தது. இதனால் மீன்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர். பெரிய பெரிய அளவிலான வஞ்சிரம் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால் வஞ்சிரம் 1 கிலோ 1,000 ரூபாய்க்கும், சங்கரா மீன் 450 ரூபாய்க்கும், பாறை மீன் 450 ரூபாய்க்கும், நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், இறால் 300 ரூபாய்க்கும், பன்னி சாத்தான் மீன் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் கேரளாவுக்கும் மீன்கள் ஏற்றுமதி நடைபெற்றது. மீன்படி தடைக்காலத்தால் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்ட கடலூர் துறைமுகம் மீன்பிடி தளம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
The post தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.
