×

பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மானாமதுரை/பரமக்குடி, மே 13: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் மானாமதுரையில் வீர அழகர் பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார். இதுபோல் பரமக்குடி, சிவகங்கையில் நடந்த நிகழ்வில் கள்ளழகர் ஆற்றினர் இறங்கினார்.

மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களின் போது தினந்தோறும் வீர அழகர் யானை, கருடன், ஹனுமன், ஆதிசேஷன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு அழகர் கோயில் பின்புறம் உள்ள வைகை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த கொம்புக்காரனேந்தல் சேர்வைக்காரர் மண்டகப்படி உள்ளிட்ட பல்வேறு மண்டகப்படிகளில் அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.

பின்னர் ஆற்றை கடந்து வீதி உலா வந்து தியாக வினோத பெருமாள் கோயிலை சென்றடைந்தார். தியாகவினோத பெருமாள் கோயில் உபயதாரர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கள்ளழகர் வேடம் பூண்டு பச்சைப் பட்டு உடுத்தி வெள்ளை குதிரை வாகனத்தில் மேல்கரை வழியாக சென்று காலை 6.50 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.

பின்னர் ஆற்றுக்குள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்த சப்பரத்தில் அழகரை வைத்து தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

விழாவில் மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், நகராட்சி ெபாறியாளர் பட்டுராஜன், சீனியப்பா அன்கோ, பழனிஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் சுப்பிரமணியன், ஜான் தினகரன், சீனியப்பா டிம்பர் டிரேடிங் உரிமையாளர்கள் நடராஜன். என்.சுரேஷ், ஆனந்த கிருஷ்ணன் அன்கோ உரிமையாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், குணா(எ)குணசீலன், அகிலா டிம்பர் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் எல்.சுரேஷ், அண்ணாமலை, அருணாட்சி அம்மன் சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்கள் நாகராஜன், ராஜேந்திரன், சண்முகசுந்தரம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் நூற்றக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சர்பத், தர்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. சர்க்கரை பொங்கல், புளியோதரை, லெமன், தயிர்சாதம் உள்ளிட்ட கலவை சாதங்களும் வழங்கப்பட்டன. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆழகரை காண வந்த ெபாதுமக்களின் வாகனங்களால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மைதானத்தை நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான கார், பைக், சரக்கு வாகனங்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுந்தர்ராஜ பெருமாள் நேற்று கள்ளழகர் வேடத்துடன் பச்சை பட்டு உடுத்தி பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார். சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் மஞ்சள் நீர் பீச்சியடித்து குளிர்ச்சியுடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து பரமக்குடி வைகை ஆற்றில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரைத் தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து ஒட்டப்பாலம் பகுதியிலுள்ள தல்லாகுளம் பகுதியில் குதிரை வாகனத்தில் எதிர்சேவை நடைபெற்றது. மஞ்சள்பட்டினம், காட்டுபரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்த கள்ளழகருக்கு விவசாய நிலங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கள்ளழகர் மீது வீசினர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 4ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு சித்ரா பவுர்ணமி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலை கோயிலில் இருந்து வெள்ளிக் குதிரையில் புறப்பட்ட அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் காட்சி தரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று காலை 6.45 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துடன் வெண்பட்டு உடுத்தி அழகர் பூவாளம் ஆற்றில் இறங்கினார். இரவு 7மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோயில்கள் மற்றும் மண்டபங்களில் அழகர் காட்சி தருதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு இன்று இரவு விழா நிறைவடைகிறது.

The post பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Aglagar ,Manamadurai ,Paramakudi ,Chithirai festival ,Vaigai river ,Sivaganga ,Kallagar… ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...