×

தாட்கோ மூலம் ரூ.5 லட்சம் மானியம் ஆதிதிராவிடர் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

 

திருவள்ளூர்: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.5 லட்சம் மானியத்துடன் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்க குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்.

வயது 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பயனாளிகள் newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ மூலம் ரூ.5 லட்சம் மானியம் ஆதிதிராவிடர் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dravidians ,TADCO ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி